இந்தியாவின் கோவா மாநிலத்தில் தாயார் மற்றும் சகோதரனால் 20 ஆண்டுகள் தனி அறையில் சிறை வைக்கப்பட்ட 45 வயது பெண்ணை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த பெண்ணின் உறவினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலையே பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போதிய உணவின்றி, மிகவும் சோர்வுடன், நோய்க்கூறுடன் காணப்பட்ட குறித்த 45 வயது பெண்மணி தற்போது வடக்கு கோவா மாவட்டத்தில் அமைந்துள்ள மபூசா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், தனது பி.ஏ. பட்டப்படிப்பை தொடர முற்பட்டபோது தாய் மற்றும் சகோதரனால் தனி அறையில் குறித்த பெண் அடைத்து வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக போர்வை, படுக்கை இன்றி சிமெண்ட் தரையில் குறித்த பெண் படுத்து உறங்கியுள்ளார். பெண்ணின் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் முறையான புகார் அளிக்கப்படும் என சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொலிசார் குறித்த அறைக்குள் நுழையும் போது அந்தப் பெண் உடலில் ஆடையில்லாமல் இருந்துள்ளார். மட்டுமின்றி அறையை விட்டு வெளியே வரவும் பிடிவாதம் பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் உறவினர் ஒருவர் மாறுபட்ட கருத்தை ஊடகங்களுக்கு பதிவு செய்துள்ளார். அதில், மும்பையைச் சேர்ந்த ஒருவரை குறித்த பெண் திருமணம் செய்து கொண்டார் என்றும், ஆனால் அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பது தெரிந்த பிறகு தன் இவர் வீட்டுக்கே திரும்பியுள்ளார். மும்பையிலிருந்து திரும்பிய பிறகே அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று நடந்து கொண்டார் என்றும், இதனையடுத்தே குறித்த பெண்ணை தனி அறையில் அடைத்தனர் என்றும் தெரிவித்துள்ளனர்.






