விஜயசேதுபதியின் படத்தை பார்க்காமலேயே வாங்கிய ஜேஎஸ்கே பிலிம்ஸ்..!

274

vijaysethuதென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய விஜயசேதுபதி, அதையடுத்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரது அடுத்த படமாக ரம்மி ரிலீசுக்கு தயாராகி விட்டது.

கே.பாலகிருஷ்ணன் என்ற புதிய இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்திலும் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை மாதிரி இன்னொரு ஹீரோவுடன் இணைந்து நடித்திருக்கிறார் விஜயசேதுபதி.

இதற்கு முன்பு நான் நடித்த படங்களில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட கதையில் இப்படம் உருவாகியுள்ளது என்று சொல்லும் அவர், படத்திற்கான கதை ரெடி பண்ணுவது, படத்தில் நடிப்பதை விட, அதை நல்ல முறையில் விளம்பரம் செய்து ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்வதே இன்றைய நிலையில் கடினமான விசயம் என்பதால், படத்தை நல்ல கம்பெனியிடம் ஒப்படைத்து ரிலீஸ் செய்து விட வேண்டுமென்று ஜேஎஸ்கே பிலிம்ஸ் சதீஸ்குமாரிடம், தனது படத்தை வாங்கி வெளியிடுமாறு கேட்டுக்கொண்டாராம்.

பரதேசி, தங்கமீன்கள் உள்பட சில தரமான படங்களாக ரிலீஸ் செய்துள்ள சதீஷ்குமார், விஜயசேதுபதி கேட்டுக்கொண்ட ஒரே காரணத்துக்காக, ஒரு 15 நிமிடம் அவர் சொன்ன கதையை மட்டுமே கேட்டு படத்தை வாங்கியுள்ளாராம்.

அதோடு, விஜயசேதுபதியின் கதை செலக்சன் நன்றாகத்தான் இருக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது என்று சொன்ன அவர், இதுவரை விஜயசேதுபதி படங்களுக்கு இல்லாத அளவுக்கு பிரமாண்டமான முறையில் பப்ளிசிட்டி செய்யவும் திட்டமிட்டுள்ளாராம்.