ஆதிவாசி வயிற்றில் ஒரு பருக்கை கூட இல்லை : இந்தியாவை உலுக்கிய சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்!!

302

இந்தியாவில் பசிக்காக உணவு தேடிச் சென்ற மது என்ற இளைஞனின் வயிற்றில், ஒரு பருக்கை சோறு கூட இல்லை என்பது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

கேரளாவில் உணவுக்காக அரிசி திருடியதாக கூறி ஆதிவாசி இளைஞர் மது என்பவர் 15 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே, கடந்த 24-ஆம் திகதி அவரின் உடற்கூறு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த அறிக்கையில், மதுவின் வயிற்றில் ஒரு பருக்கை சோறுகூட இல்லை. சில பழங்கள் மட்டுமே அவரின் வயிற்றுக்குள் இருந்துள்ளது.

அதுமட்டுமின்றி பசிக்காக திருடியவர் என திருட்டு பட்டத்தை சுமந்த மது, பல நாட்கள் பட்டினியாகக் கிடந்துள்ளார். அதனால் அவரின் எலும்புகளும் தசைகளும் மிகவும் பலவீனமான நிலையில் இருந்துள்ளது.

ஆய்வில் உடல் முழுவதும் காயம் இருந்துள்ளது. தலையிலும் பலத்த காயம் காணப்பட்டுள்ளது. மார்புக்கூடு இரண்டாக உடைந்துள்ளது.

உடலில் மொத்தம் 50 காயங்கள் உள்ளது. அந்த 50 காயங்களில் 20 காயங்கள், இறப்பதற்கு முந்தைய நாள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரும்பு ராடால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரின் மரணத்துக்கு, தலையில் ஏற்பட்ட அந்தக் காயம்தான் முக்கியக் காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வாகனத்தில் ஏறும்போது மதுவே தெரியாமல் வாகனத்தில் இடித்துக் கொண்டதால் அந்த காயம் ஏற்பட்டது என்று திசை திருப்புவதற்கான முயற்சிகள் நடப்பதாகவும், மது கஞ்சாவுக்கு அடிமையானவர், காதல் தோல்வியால்தான் காட்டுக்குச் சென்றார் என்ற ரீதியிலும் வழக்கை திசைதிருப்புவதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.