பெரியார் சிலை நிழலை கூட தொட முடியாது : கொந்தளிக்கும் தமிழக அரசியல் தலைவர்கள்!!

628

பெரியார் ஈ.வே.ரா சிலை உடைக்கப்படும் என்ற ஹெச்.ராஜாவின் பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திரிபுராவில் பாஜக வெற்றி பெற்ற பிறகு 25 ஆண்டுகளாக இருந்து வந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலை இடிக்கப்பட்டது.

இந்த தகவலை தன் முகநூல் பக்கத்தில் பெருமையாக பதிவிட்டிருந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ‘திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டு விட்டது. அடுத்து தமிழகத்தில் பெரியார் சிலை தான்’ என பதிவிட்டிருந்தார்.

இதைக்கண்டு கொதித்தெழுந்த தமிழக அரசியல் தலைவர்கள் ஹெச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ளனர்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்

பெரியார் சிலையை தொட்டுப் பார்க்கக்கூட தகுதியற்றவர் ஹெச்.ராஜா. வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

டிடிவி தினகரன்

பெரியார் சிலை உடைக்கப்படும் என ஹெச்.ராஜா பேசியிருப்பது அநாகரிகம்.

நாம் தமிழர் கட்சி சீமான்

அவர் பேசியதை பெரிது படுத்த வேண்டாம். பெரியார் சிலையை தொட்டால் என்ன நடக்கும் என்று ராஜாவுக்கு நன்றாக தெரியும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

பெரியார் சிலை மீது கை வைத்தால் நடப்பதே வேறு. கை வைத்தால் துண்டு துண்டாக கை வெட்டப்படும்.

விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன்

பெரியார் சிலையை அகற்ற ஹெச்.ராஜாவின் முப்பாட்டனே வந்தாலும் முடியாது.

சுப.வீரபாண்டியன்

நாளை என்ன நாளை வீராதி வீரர்கள் இன்றே பெரியார் சிலை மீது கை வைத்து பார்க்கட்டும்.

குஷ்பு, காங்கிரஸ்

எங்களைத் தாண்டி பெரியார் சிலையின் நிழலை கூட உங்களால் தொட முடியாது. திகதி குறித்து வாருங்கள். முடிந்தால் எங்களைத் தாண்டி தொட்டுப் பாருங்கள்.

ஜெ.தீபா

பெரியார் மண்ணிலிருந்து பெரியார் சிலையை அகற்றி விட முடியுமா? வெறும் சிலை இல்லை, சிங்கம் அவர். அவரை தொட்டால் ஏற்படும் விளைவுகள் நினைத்து பார்க்க முடியாதவை.