ருமேனியா நாட்டில் உயிருடன் இருப்பவருக்கு வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழை ரத்து செய்ய அந்நாட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பார்லாத் பகுதியைச் சேர்ந்தவர் கான்ஸ்டன்டைன் ரியு (63). இவர் 1990களின் போது வேலை காரணமாக துருக்கிக்கு சென்றிவிட்ட நிலையில், பல ஆண்டுகள் கழித்து, கடந்த ஜனவரி மாதம் தான் ருமேனியா திரும்பினார்.
பல ஆண்டுகளாக ஊர் திரும்பாததாலும், குடும்பத்துடன் தொடர்பு கொள்ளாததாலும், உள்ளூரில் வழங்கப்பட்ட சான்றிதழ்களை புதுப்பிக்காததாலும் ரியு இறந்துவிட்டதாக ருமேனியா அரசு 2016ம் ஆண்டு அறிவித்திருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது இறப்பு சான்றிதழை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரியுவின் இறப்பு அறிவிப்பை ரத்து செய்ய மறுத்துவிட்டது.
ரியுவின் குடும்பத்தாரும் தற்போது ருமேனியாவில் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் வெளிநாடு சென்று விட்டனர். தற்போது அக்கம் பக்கத்தினர் தான் ரியுவுக்கு உதவி வருகிறார்கள்.