ரஷ்ய வணிக வளாக தீ விபத்து : குடும்பத்தினர் அனைவரும் பலி : கோமாவில் 11 வயதுச் சிறுவன்!!

593

ரஷ்ய வணிக வளாக தீ விபத்தின்போது தப்புவதற்காக ஜன்னல் வழியாக குதித்த Sergei Moskalenko(11) என்னும் சிறுவன் கோமாவில் உள்ளான்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செய்தியாக அவனுடைய பெற்றோர், சகோதரி உட்பட நான்கு பேர் தீ விபத்தில் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

நேற்று ரஷ்யாவின் Kemerovo நகரிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டது. குழந்தைகளில் ஒன்று லைட்டர் ஒன்றை வைத்திருந்ததாகவும், trampoline ஒன்று தீப்பிடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நேற்று விடுமுறை தினமாதலால் பல குழந்தைகளும் பெற்றோரும் வணிக வளாகத்திற்கு வந்திருந்தனர். இதனால் இறந்தவர்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. இதுவரை 64 பேராவது உயிரிழந்திருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் 100 பேர் வரை இறந்திருக்கலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் Sergei Moskalenko என்னும் சிறுவனும் ஒருவன்.

அவன் தீயிலிருந்து தப்புவதற்காக 40 அடி உயரத்திலிருந்து ஜன்னல் வழியாகக் குதித்தான். அவனைக் காப்பாற்றும்படி தீயணைப்பு வீரர்கள் போர்வை ஒன்றை பிடித்துக் கொண்டு நின்றார்கள்.

ஆனால் அந்த சிறுவன் கீழே விழும்போது நேரடியாகக் கீழே விழாமல் ஒரு தடுப்பில் மோதி கீழே விழுந்ததால் அவனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன் கோமா நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விபத்தில் அவனது மொத்தக் குடும்பமும் இறந்து போனதால அவனது பாட்டிகள் இருவருமே அவனைப் பார்த்துக் கொள்கின்றனர்.

இன்னும் பல குழந்தைகளைக் காணாததால் பலியானோர் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.