யாழ். வடமராட்சி கிழக்கு, அம்பன் கிராமத்தில் வீட்டில் தனித்திருந்த தாயும், மகளும் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்ட நிலையில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதில் பலத்த தாக்குதலுக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட மகள் உயிரிழந்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் தாயாரான நல்லதம்பி – இராசம்மா (வயது 75) பலத்த காயங்களுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் நல்லதம்பி – ரேவதி (57 வயது) எனவும் திருமணம் செய்யாதவர் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






