இறைவனுக்கு காது கூர்மையானது : நீதிபதி மா.இளஞ்செழியன்!!

600

இறைவனுக்கு காது நல்ல கூர்மை. அதனால் சத்தமாக வழிபட வேண்டிய தேவை இல்லை என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார்.

நாயன்மார்கட்டு பகுதியில் அமைந்துள்ள மதவழிபாட்டு தலத்தில் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் அதிக சத்தம் எழுப்பி வழிபாட்டில் ஈடுபடுவதனால் தாம் பல இன்னல்களை எதிர்நோக்குவதாக நபர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு யாழ்.மேல் நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது மனுதாரர், அதிகாலை வேளைகளில் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறித்த மதவழிபாட்டு இடத்தில் கூடுவோர்கள் அதிக சத்தம் எழுப்பி வழிபாட்டில் ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாக இருதய நோய் உள்ள தான் பாதிக்கப்படுவதாகவும், தனது சிறு பிள்ளைகளும் பாதிக்கப்படுவதாகவும் மன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவிக்கையில், “இறைவன் நல்ல காது கூர்மை உடையவர். அவரை அமைதியான முறையில் வழிபடலாம். எங்கள் உரிமை மத வழிபாட்டு உரிமை என்பது மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது.

தற்போது ஆலயங்களில் ஒலிபெருக்கி பாவனைகள் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளன. கடவுளை அமைதியாக மற்றவர்களுக்கும், மற்ற மதத்தினருக்கும் இடையூறு விளைவிக்காத வகையில் வணங்குங்கள்” என தெரிவித்தார்.