யாழில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்!!

248

காங்கேசன் துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட ஐந்து இந்தியர்கள் தொடர்பில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவர்கள் மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி வந்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட ஐந்து இந்தியர்களில் மூவர் மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து போதை பொருட்கள் கடத்தப்படுவதாக இலங்கை வடக்கு பிராந்திய கடற்படை அதிகாரிகளுக்கு நேற்று மாலை இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, இலங்கை கடற்படை அதிகாரிகள் சர்வதேச கடல் எல்லை முதல் காங்கேசன் துறைமுகம் வரை கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக கடலில் நின்று கொண்டிருந்த படகில் சோதனை நடத்தியுள்ளனர்.

அந்தப் படகில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை இலங்கைக்கு கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து படகில் பயணித்த ஐந்து மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து காங்கேசன்துறைமுக பொலிஸாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்