அமைச்சரைவயிலிருந்து விலகப் போவதில்லை : சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்!!

737

அமைச்சரைவயிலிருந்து விலகப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நேற்றைய தினம் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது வாக்களித்த போதிலும், அமைச்சரவையிலிருந்து விலகப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 13 அமைச்சர்கள் இது பற்றி நேற்றைய தினம் இரவு தீர்மானித்துள்ளனர். அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடித்திருக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி. திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, அனுர பிரியதர்சன யாபா, ஜோன் செனவிரட்ன, சுசில் பிரேமஜயந்த, லக்ஸ்மன் யாபா, டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி, அனுராத ஜயரட்ன, சுசந்த புஞ்சிநிலமே, சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே, சுமேதா ஜயசேன மற்றும் தரானாத் பஸ்நாயக்க ஆகிய அமைச்சர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்டிருந்தனர்.

நல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபாலவினது எனவும், ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் அமைச்சராக நீடிப்பதில் பிரச்சினை கிடையாது என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது வாக்களிப்பதற்கு சகல உரிமையும் உண்டு எனவும், ஜனாதிபதி கூறும் வரையில் அமைச்சுப் பதவியில் நீடிக்க முடியும் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் பிளவுகளினால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதில் சிக்கல் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.