நீங்கள் காணும் கனவுகளும் அவற்றுக்கான பலன்களும் : கண்டிப்பாக படியுங்கள்!!

708


நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.



இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறது. பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு. வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.



திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும். ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும். இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.



சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும். தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும். இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும். திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.


தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும். உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும். கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.

ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும். மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.


மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும். வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும். மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும். குழந்தையைக் கனவில் காண்பது நல்லது. தொழில் விருத்தி ஏற்படும். பொருள் வரவு அதிகமாகும்.

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் விளையாடுவது போலவோ, சிரித்து மகிழ்வது போலவோ கனவு கண்டால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலைக்கும். சூரியனைக் கண்டால் வியாதிகள் நீங்கும். விரோதிகளை வெல்லும் ஆற்றல் கிட்டும். கோயிலைக் கண்டால் நூதனமான தொழில் விருத்தியாகும். செல்வம் குவியப்போவதைக் குறிக்கும்.

வெல்லத்தைச் சாப்பிடுவதாக கனவு கண்டால் வறுமை நீங்கும்.பலருடன் சேர்ந்து சாப்பிடுவதாக கனவு கண்டால் பொருள் லாபம் உண்டாகும். பழங்களை ஒருவர் தனக்கு கொடுப்பதாகவோ, உண்பதாகவோ கனவு கண்டால் செய்யும் காரியம் வெற்றியாகும்.

குருவிகளைக் கனவில் காண்பது நன்மையானது. கஷ்டமான நிலை விலகும். வம்புவழக்கு இருப்பின் வெற்றி கிட்டும்; நோயுற்றிருப்பின் நோய் அகலும். குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக் கண்டால் திருமணமாகாதவருக்கு திருமணமும் திருமணமாகியிருந்தால் புத்திர பாக்கியமும் உண்டாகும்.


குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போலவும் தன் குடும்பத்துடன் இருப்பதையும் கண்டால் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும். ஒரு நூதமான இயந்திரத்தைக் கண்டால், தான் மேற்கொள்ளப் போகும் செயலால் வெற்றியும் இலாபமும் ஏற்படும்.

அந்த இயந்திரத்தைத் தானே இயக்குவதாய்க் காண நேரின், செய்யப்போகும் தொழிலில் நிச்சயம் அபிவிருத்தியும் இலாபமும் மிகும். அந்த இயந்திரம் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கண்டால் தான் நினைக்கும் காரியத்தைச் செய்வதால் நன்மை பெறலாம். ஆனால் இயந்திரம் ஓடிக்கொண்டே இருந்து நின்று போவதாகக் கண்டால், செய்யும் தொழில்கூட பாழ்படப் போகிறது என்பதை அறியலாம்.

ஆண் பெண் கலந்த கூட்டத்தைக் கண்டால் செய்தொழிலில் விருத்தி உண்டாகும். தெளிந்த நீரைக்காணின் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கப் போவதையும், நல்ல காலம் தொடங்குகிறது என்பதையும் அறியலாம். பேனா அல்லது எழுதுகோல் எதையேனும் கண்டால் கடிதம் மூலமாக பொருள் வரவு ஏற்படும்.

அரண்மனையைக் கண்டால் பொருள் விருத்தியாகும். அரண்மனைக்குள் தாமே செவதாய்க் கான நேரின், உற்றார் உறவினர்களால் சந்தோஷம் மிகுதியாகும். செல்வ நிலையும் உயரும். வயதில் மூத்தவர்கள் தன்னை ஆசீர்வாதம் செய்வது போன்று கனவு கண்டால் ஜீவன மேன்மையும் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது. தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும். சாவிக் கொத்து தன்னிடம் இருப்பதாகக் கண்டால் குடும்பத்தில் பற்று அதிகமாகும். தொழிலில் மேன்மை, பொருள் சேர்க்கைமிகும்.
சுப சொப்பனங்கள்.

பசு, எருது, யானை தேவாலயங்கள, அரண்மனை, மலைஉச்சி, விருக்ஷம் இவைகளின் மேல் ஏறுதல், மாமிச பக்ஷணம், தயிரன்னம் புசித்தல் வெள்ளை வஸ்த்திரம் தரித்தல், ரத்தின ஆபரணங்கள் காணல், சந்தனம் பூசிக்கொள்ளல், வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம், அகில், வெள்ளை புஷ்பம் இவைகளை கண்டால் சொற்ப சம்பத்து உண்டாகும்.

வெண்ணிறப் பாம்பு கடித்தல் தேள் கடித்தல் சமுத்திரம் தாண்டல், நெருப்பில் அகப்படுதல், கட்டுப்படல் இவைகளை கண்டால் தனலாபம் உண்டு. தீ புகைந்தும், நெருப்புப் பொறிகள் பறந்தும் அந்த வஸ்திரம் எரிந்து போவதாகக் கனவு கண்டால் தொழில், விவசாயம் இவற்றில் நஷ்டம் ஏற்படலாம். தீப்பிடித்து எரிந்து சாம்பலாவதுபோலக் கனவு கண்டால் கஷ்டம், நோய்கள் ஏற்படக் கூடும்.

புகையும், நெருப்புப் பொறிகளும் இல்லாமல் நன்றாக எரிவது போலக் கனவு கண்டிருந்தால் சொத்து சேரும், அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கிடைக்கும். இருக்கும் பிணிகள் மருத்துவம் செய்யாமலேயே பறந்துவிடும்.

நீர் நிலை கனவுகள்

நீர் நிலைகளை கனவில் பார்த்தால் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. ஆறு பெருக்கெடுத்து ஓடுவது, நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது, கடல் பொங்கி வருவது, குளம் நிரம்பி வழிவது போல கனவு கண்டாலும் அடுத்தடுத்து நல்ல செயல்கள் நடக்கும்.

நீர் நிலைகளில் நீராடுவது போல் கனவு கண்டால் சுப பலன்கள் ஏற்படும். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லப்போகிறார் என்பதை இந்த கனவு தெரிவிக்கிறது. வெள்ளை நாகம் கனவில் வந்தால்,இந்தக் கனவு ஒரு ஆபத்தை முன் கூட்டியே அறிவிக்கும் ஒரு முன்னோடியாகவே தோன்றுகிறது.

வெள்ளை நாகம் என்பது பொதுவாகவே எதிர்காலத்தை குறிக்கும். ஆகவே எந்த வித புது முயற்சிகளையும் மேற்கொள்ளும்போது ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்படுங்கள்.

இறந்தவர்களைக் கனவில் கண்டால் என்ன பலன்?

இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.

ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம்,பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.

இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம். வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.

தீய பலன் தரும் கனவுகள்.

பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும். தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும். எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும். எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.

இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள். பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும். புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.

குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும். நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார். ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.

நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும். முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும். முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும். சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும். பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.

காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது. குருவிகள் கூட்டைப் பார்த்தால்கூட, இந்தப் பலன் உண்டு. ஆனால் குருவிக் கூட்டைத் தானே பிரிப்பதாய் கண்டால் துயரமிகுந்த சம்பவம் நடக்க இருக்கிறது என்பதை அறியலாம்.

குருவிகள் குதூகலமாய் இருப்பதைக் காண்பதும் நல்லதே. ஆனால் குருவிகள் சண்டை போடுவதைப் போல கண்டால் குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டு பிரிய நேரும். தொழிலும் பகை ஏற்பட்டு ஜீவனக் கேடு உண்டாகும். குருவிகள் இறந்து கிடப்பதைக் கண்டால்கூட கெடுபலன். பல தொல்லைகள் உண்டாகும்.

அடுப்பு சுவாலையுடன் எரிந்து கொண்டிருப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கி இலாபம் பெற நேரும். அடுப்பு எரியாமல் அதனுள் பூனையோ அதன் குட்டிகளோ இருப்பதாகக் காண நேரின் ஆரோக்கியக் கேடும், செய்தொழிலில் நஷ்டமும் உண்டாகும்.

எரியும் அடுப்பு அணைத்து அதன் கரியையோ சாம்பலையோ காணநேரின் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டு அதனால் துன்புறப் போவதை உணர்த்தும்.

அழுக்கு ஆடை அணிந்திருப்பதாகக் கண்டால் பலவித சங்கடங்கள் நேர இருக்கின்றன என அறியலாம். வெண்பட்டு ஆடை உடுத்தியிருப்பதாகக் காண நேரின் பெண்களின் சேர்க்கையும் அதனால், இலாபமும் நேரும் தன்னை யாரோ

ஏமாற்றிவிட்டதாகக் கண்டால் வஞ்சகத்தால் தன்னிடமுள்ள பொருள் பறிபோகப் போகிறது என்பதை அறியலாம். நீர்க்குமிழியைக் கண்டால் சிறு சிறு நஷ்டங்கள் ஏற்படும். பிறர் தன் மீது வீண்பழி சுமத்துவர். எலுமிச்ச மரத்தைக் காண்பது நல்லது.

அதில் பழங்கள் மிகுந்து தொங்குவதாகக் காணப்பட்டால் உடனடியாக எதிர்பாராத பணவரவு ஏற்படும். அதுவே பழமாக இல்லாது காயாக இருப்பின் பண வரவு ஏற்படும். ஆனால் மிகவும் தாமதமாய்க் கிடைக்கக்கூடும்.

எலுமிச்ச மரம் உலர்ந்து போய் விட்டதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். அப்பழத்தைச் சாப்பிடுவதாகக் கண்டால் நல்ல தன்று. குடும்பத்தில் ஏதோ ஓர் அசம்பாவிதம் நேரப் போவதைக் குறிக்கும். காய்ச்சல், நோய் ஏற்படும்.

காதுகளைக் கண்டால் குடும்பத்தில் கலகம் ஏற்பட்டு அதனால் கஷ்டம் நேரும். தனக்கு காதுநோய் வந்துவிட்டதாகக் கண்டால் கூட குடும்பத்தில் ஏற்படப் போகும் கலகத்தின் அறிகுறியே ஆகும்.சாவிக் கொத்து காணாமல் போனதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். நம்பிக்கை மோசம் போவார். ஒரு கதவையோ பூட்டையோ திறப்பதாகக் கண்டால் பிறருக்கு உதவுவதன் மூலமாகப் புகழ் பெறுவர் உண்மை.

நமது ஆழ்மனதில் புதைந்துள்ள நிறைவேறாத ஆசைகள், முளையில் பதிவான சமீபத்திய நிகழ்வுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருகின்றன. இதற்கு பலன்களாக நாம் எடுத்துக்கொள்பவை, நம்மால் ஏற்படுத்தபட்டவைதான். அவற்றில் உண்மை கிடையாது. `அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போலத்தான்.

கனவுகள் தொடர்பான பலன்களும்! நல்ல பலன் ஏற்படும் என்று நம்பினால் நல்ல பலனை அடையலாம் அல்லது அதை நெருங்கலாம். அதேபோன்றுதான் தீயபலனுக்கும்!

பாம்பு கனவில் வந்தாலும் பயப்பட வேண்டாம். பாலூட்டி இன மிருகமே இன்றைய மனித இனத்தின் முந்தைய நிலை. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் பாலூட்டிகளுக்கும், பாம்பு போன்ற ஊர்வனவற்றிற்கும் பயங்கரமான சண்டைகள் நடந்தன. அந்த பழைய பகை உணர்வுகளின் நினைவுகள் மனித இனத்தின் மரபணுக்களில் அழுத்தமாக பதிந்து போனதுதான் மேற்படி கனவுக்கு காரணம்.

கனவு பற்றிய மேலும் சில உண்மைத் தகவல்கள்:

பார்வை இல்லாதவர்களுக்கு வரும் கனவுகளில் உருவங்கள் இடம்பெறுவதில்லை. சத்தம் மட்டுமே வரும். வளர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமின்றி கைக் குழந்தைகளும் கனவு காண்கின்றன.ஏன்
தாயில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கூட கனவு வருகிறது.

மனிதர்களை போன்று மிருகங்களும் கனவு காண்கின்றன அடைய நினைக்கும் உயர்நிலையை நம் எண்ணங்களை வாக்கியங்களாய் அமைத்து நம் பார்வையில் படும்படி வைப்பது நல்ல பலனைத் தரும்.

ஏனெனில் எது கண்களில் படுகின்றதோ அது மனதில் ஆழமாகப் பதிகின்றது. மனம், தொடர்ந்து எதை நினைக்கின்றதோ அதுவாகவே நாம் ஆகிறோம்.

வெற்றியின் முதல் கட்டம் நம்மை நாமே வெற்றியாளராக பார்ப்பதுதான். இதுமட்டும் வெற்றிக்கான காரணி ஆகிவிடாது. கனவில் கண்டு மகிழ்ந்த காட்சியும் கண்முன்னே தெரியும் வாசகங்களும் நிஜம் பெற சரியான திட்டம் தேவை.