வாடகை தராததால் கழிவறையை பூட்டிய வீட்டு உரிமையாளர் : அவமானத்தில் பெண் தற்கொலை!!

347

 

வாடகை செலுத்தாமல் வீட்டு கழிவறையை பயன்படுத்த உரிமையாளர் தடை விதித்ததால் அவமானத்தில் குடும்பப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையை சேர்ந்த ரவி மற்றும் லாவண்யா தம்பதியினர் அப்பகுதியில் உள்ள புது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். வீட்டுக்கு வாடகையாக 1500 ரூபாய் செலுத்திவந்த நிலையில் கூடுதல் வாடகை கேட்டு உரிமையாளர் தொந்தரவு செய்துள்ளார் .

அது மட்டுமல்லாமல் கூடுதல் வாடகை கொடுத்தால் மட்டுமே வீட்டின் கழிப்பறை சாவியை கொடுப்பேன் என கூறிவிட்டு கழிப்பறையை பூட்டி சாவியை எடுத்துச்சென்றுள்ளார். லாவண்யாவின் கணவர் வேலூர் பேருந்து நிலையத்தில் டீ மாஸ்டராக இருப்பதால் குறைந்த அளவு வருமானமே அந்த தம்பதியினருக்கு இருந்துள்ளது.

ஆகவே தற்காலிகமாக ஓலை மூலம் தடுப்பு அமைத்து குளிப்பதற்கும், மலம் கழிக்க திறந்த வெளியையும் லாவண்யா பயன்படுத்தி வந்துள்ளார்.

இருப்பினும் கழிவறை பிரச்சனையை தீர்த்து வைக்கும்படி கணவர் ரவியிடம் பலமுறை லாவண்யா முறையிட்டுள்ளார். ஆனால் குறைந்த வருவாய் காரணமாக ரவியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் கழிப்பறை பிரச்சனை தீராததாலும் திறந்த வெளியில் குளிப்பதாலும் மனமுடைந்து லாவண்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.