தீவிர சிகிச்சை பிரிவில் கவிஞர் வாலி.. அதிர்ச்சியில் திரையுலகினர்

439

Vaali

காவியக் கவிஞர் என்று இலக்கிய உலகில் போற்றப்படும் கவிஞர் வாலி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் கண்ணதாசனுக்குப் பின் கவிஞரென்றால் அது இவர்தான் என புகழப்படுபவர் வாலி. வர்த்தக ரீதியிலான சினிமா பாடல்கள் மட்டுமல்ல, இலக்கியவாதிகள் அதிசயிக்கும் அளவுக்கு காவியங்கள் படைப்பதிலும் வாலி நிகரற்றவர்.

எந்த அரசியல்வாதியுடனும், இலக்கியவாதியுடனும், இசையமைப்பாளருடனும் சிக்கலில்லாத உறவைப் பேணுவதில் வாலி ஒரு சிறந்த உதாரணம். தன்னை வளர்த்து விட்டவர்கள், வாழ்க்கை தந்தவர்கள் அனைவரிடத்திலும் இன்று வரை நன்றி பாராட்டுவதில் வாலிக்கு இணையாக ஒருவரையும் சொல்ல முடியாது.

இதனால் திரையுலகில் அனைவருக்கும் இனியவராக வாலி திகழ்கிறார். காலையில் இளையராஜாவிடம் பாட்டெழுதும் அவர், மாலையில் ரஹ்மானுக்கும் பாட்டெழுதுவார். இருவருமே அவர் மீது அன்பைப் பொழிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வாலிக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்து மறுபிறவி எடுத்து வந்தார். அவ்வப்போது உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு மூன்று தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தாலும், அவர் இன்னும் பூரண குணமடையவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாலியின் உடல் நிலைக் குறித்து கேள்விப்பட்டதும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் நலம் பெற பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.