முல்லைத்தீவில் பெண்களை படம் பிடித்த நுண்நிதி நிறுவனத்தின் ஊழியர்கள்!!

583

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் நுண்நிதிக்கடன் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைதியான முறையில் இன்று மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது.

இதில் முல்லைத்தீவு நகர்பகுதியில் இயங்கிவரும் நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் எனக் கூறப்படும் சிலர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ள பெண்களை ஒளிப்படம் எடுத்துள்ளார்கள்.

நுண்நிதி கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர்நோக்கும் சமூகமாகங்களை பாதுகாக்கும் நோக்கில் குறிப்பாக பெண்களை பாதுகாக்கவும், இந்த நுண்நிதிக்கடன் செயற்பாட்டில் சிக்கியிருக்கும் மக்களை விடுவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அரசாங்கத்திற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் வடக்கின் சில மாவட்டங்களில் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து கவனயீர்ப்பு பேரணியாக முல்லைத்தீவு நகர் பகுதி ஊடாக மாவட்ட செயலத்தினை மக்கள் சென்றடைந்துள்ளார்கள்.

இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்களை முல்லைத்தீவு நகரில் பிரபல்யமான ஒரு கடன் வழங்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒளிப்படம் எடுத்து பெண்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

இதனையும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அவதானித்து கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர்பகுதியில் எட்டிற்கு மேற்பட்ட நுண்நிதி கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.

இவ்வாறு கடன் வழங்கும் நிறுவனங்கள் பெண்களிடம் சென்று குழுக்களாக சேர்ந்து ஆசை வார்த்தை காட்டி கடன்களை வழங்கிவருவதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.