யாழில் கரையொதுங்கிய சகோதரர்களின் சடலங்கள் : மரணத்திலும் இணைபிரியாத சோகம்!!

274

யாழ். புங்குடுத்தீவு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட தலைமன்னார் மீனவர்கள் இருவரின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றுள்ளன.

தலைமன்னார் கடற்பகுதியில் கடலில் பாய்ச்சப்பட்ட வலையை கரை சேர்ப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு மீனவர்கள் 5 நாட்களின் பின் யாழ். புங்குடுதீவு கடற்கரையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ (வயது-32) மற்றும் தோ.எமல்ரன் கூஞ்ஞ (வயது 37) ஆகிய இரு சகோதரர்களும் சம்பவம் அன்று காலை கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற்காக படகு ஒன்றில் சென்றுள்ளனர்.

இதன்போது எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கி யாழ். புங்குடுதீவு கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கினர்.

பின்னர் வைத்திய பரிசோதனைகளின் பின்னர் மரணம் அடைந்த இரு சகோதரர்களின் சடலங்களும் அவர்களது சொந்த இடமான தலைமன்னார் பகுதிக்கு நேற்று கொண்டுவரப்பட்டன.

சடலங்கள் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் தலை மன்னார் ஆலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு தலைமன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

மரணத்தில் கூட இணை பிரியாமல் இறந்த இரு சகோதரர்களுடைய நல்லடக்கத்தில் ஒட்டு மொத்த தலைமன்னார் சமூகமே ஒன்று திரண்டு கண்ணீர் சிந்தி வழி அனுப்பி வைத்ததை காணக்கூடியதாக இருந்தது.