மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன் : குழந்தைகளுடன் பொலிசில் சரண்!!

465

தமிழகத்தில் தனது இரண்டாவது மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, குழந்தைகளுடன் பொலிசில் சரணடைந்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவமுருகன். அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் இவரது முதல் மனைவி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.

அதன் பின்னர், 3 ஆண்டுகள் கழித்து கல்யாணப்பிரியா என்ற பெண்ணை, சிவமுருகன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஒரு வயதிலும், இரண்டு வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், சிவமுருகனுக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதே போல், இன்று காலையும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.

இதனால் ஆத்திரமடைந்த சிவமுருகன், தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர், தனது இரண்டுகுழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஆண்டிப்பட்டி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

சிவமுருகனிடம் வாக்குமூலம் பெற்ற பொலிசார், அவரது வீட்டிற்கு சென்று கல்யாணப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, இரண்டு குழந்தைகளையும் சிவமுருகனின் பெற்றோரிடம் பொலிசார் ஒப்படைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.