அஜித்தை ஹோட்டல் அறைக்குள் வைத்து பாலா குழுவினர் அடித்தது உண்மையா?

308

ajநான் கடவுள் படப் பிரச்சினையில் நடிகர் அஜித்தை ஹோட்டல் அறைக்குள் வைத்து பாலாவும் அவரது ஆட்களும் அடித்து மிரட்டியதாக வந்த செய்திகள் உண்மையல்ல, என்று இப்போது மனம் திறந்துள்ளார் இயக்குநர் பாலா.

பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் அஜித். ஆனால் இருவருக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டுவிட்டதால், படம் தொடங்குவது தள்ளிக் கொண்டே போனது.

இந்த நிலையில் அஜித்துக்கும் பாலா தரப்புக்கும் சமரசப் பேச்சுவார்த்தை சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. அப்போதுதான் அஜீத் உடல் நிலை தேறி, பரமசிவன், திருப்பதி போன்ற படங்களில் நடித்து முடித்திருந்தார்.

சமரசப் பேச்சுவார்த்தையின்போது, அஜித்திடமிருந்து அட்வான்ஸை திரும்பப் பெற, பாலாவும் அவரது ஆதரவாளர்களும் வன்முறையைக் கையாண்டதாகக் கூறப்பட்டது. அஜித்தை மிரட்டியதாகவும், கைகலப்பு ஏற்பட்டதாகவும் பேச்சு நிலவியது. ஆனால் இரு தரப்பிலும் இதுகுறித்து எதுவும் வெளிப்படையாகப் பேசவில்லை. ஆர்யா நடிக்க நான் கடவுள் படமும் வெளிவந்துவிட்டது. அதன் பிறகு அவன் இவன், பரதேசி போன்ற படங்களையும் பாலா இயக்கி முடித்துவிட்டார்.

இந்த நிலையில் இப்போது, நான் கடவுள் சமயத்தில் பாலாவுக்கும் அஜீத்துக்கும் இடையில் நடந்தது என்ன என்று ஒரு தனியார் டிவி நிகழ்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

இந்த டிவியில் நடிகை சங்கீதா நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த பாலாவிடம், ‘நான் கடவுள்´ படம் ஆரம்பிக்கும்போது உங்களுக்கும் அஜித்துக்கும் என்ன பிரச்சனை? நீங்க அஜித்தை அறைக்குள் வைத்து அடித்து, மிரட்டியாதாகச் சொல்கிறார்களே?´ என்று கேட்டார்.

நான் அடிச்சேன், மிதிச்சேன்னு சொல்றதெல்லாம் பத்திரிகைகளின் கற்பனை! மேலே விவரம் தெரிஞ்சுக்கணும்னா.. நீங்க அல்ட்டிமேட்டுக்கிட்ட (அஜித்துக்கு அப்போதைய பட்டப் பெயர் அல்டிமேட் ஸ்டார்) தான் கேட்டுக்கணும்… ஆனால் எங்களுக்குள் மனஸ்தாபம் இருந்தது உண்மை,” என்றார் அதிரடியாக.