சந்தானத்தின் வாய்ப்பை தட்டிப்பறித்த பரோட்டா சூரி..!

305

sooriஅழகுராஜா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய தவறிவிட்டதால், தனது அடுத்த திரைப்படத்தை உடனடியாக துவங்கும் முடிவில் இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் ராஜேஷுடன் நண்பனைப் போல் பழகிவிட்ட உதயநிதி ஸ்டாலின் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.

‘பாஸ்… நீங்க எப்ப கூப்பிட்டாலும் நான் நடிக்க தயார்…’ என்ற வாக்குறுதியை ராஜேஷுக்கு பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்தபோதே கொடுத்துவிட்ட ஆர்யா தான் இத்திரைப்படத்தின் ஹீரோவாம்.

ராஜேஷின் திரையுலக வரலாற்றில் முதல்முறையாக, இந்த திரைப்படத்தில் சந்தானம் காமெடியனாக நடிக்கவில்லை எனத் தெரிகிறது. காமெடி கதாபாத்திரத்திற்காக ‘பரோட்டா’ சூரியிடம் பேசப்பட்டிருக்கிறதாம்.

வழக்கமாக தனது முந்தைய படத்தின் ஹீரோவை அடுத்த படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவைப்பது மாதிரி, இந்த படத்தில் சந்தானத்தை சிறப்புத்தோற்றத்தில் நடிக்க வைப்பாரோ? என்றால் அது நடக்கவே நடக்காது என்கிறது கோடம்பாக்கத்திலிருந்து வரும் தகவல்.

தமிழ்த்திரையுலகில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களாக இருக்கும் சந்தானத்துக்கும், சூரிக்கும் இடையே சமீபகாலமாக உரசல், மோதல் என அரசல் புரசலாக செய்திகள் வருகிறது.

இருவரும் மிக சீரியஸாக ஃபோனிலேயே திட்டிக்கொண்டதாகவும் பேசப்படுகிறது. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இத்திரைப்படம் குறித்த பல கேள்விகளுக்கு விடையளிக்கும் என்கின்றனர் திரையுலகினர். ஆனால் ரசிகர்களோ ‘யார் நடித்தாலும் எங்களுக்கு இயக்குனர் ராஜேஷ் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர் வரணும்… பழைய ராஜேஷா வரணும்…’ என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.