தமிழ்நாட்டில் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழவிளை அருகேயுள்ள பூவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிபாரதி (23). மணிபாரதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்தது.
இந்நிலையில் மணிபாரதி தனது நண்பர் பிரபாகரனுடன் நேற்று இரவு பைக்கில் தனது அக்கா வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் சென்ற மைலாடி விலக்கு பகுதி அருகே பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது.
ஆனால் பணிகள் சரியாக முடிக்கப்படாமல், அரைகுறையாக நிற்கிறது. ஒருபுறம் பணி முடிந்துள்ளது, அந்தப் பகுதியில் பெரிய பள்ளம் உள்ளது.
மணிபாரதியும் பிரபாகரனும் அந்தப் பகுதிக்கு பைக்கில் வந்தபோது, பைக் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்ததில் மணிபாரதி சம்பவ இடத்திலேயே பலியானார். பிரபாகரன் படுகாயமடைந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் மணிபாரதியின் சடலத்தை கைப்பற்றிய நிலையில் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.