தமிழ்நாட்டில் தொடர்ந்து இரவு பணி வழங்கியதால் மனஉளைச்சலில் செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த ஜெனிபர் (23) தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்தார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஜெனிபர் வீட்டில் தூக்கிட்டு கொண்டார்.
இதை பார்த்த குடும்பத்தார் ஜெனிபரை மீட்டு அவர் வேலை செய்யும் மருத்துவமனைக்கே தூக்கி சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
அதைத் தொடர்ந்து ஜெனிபரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை அருகே உள்ள வேலூர்-காட்பாடி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து ஜெனிபர் குடும்பத்தார் கூறுகையில், ஜெனிபர் 2 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றினார்.
இவருக்கு கடந்த 1 மாதமாக தொடர்ந்து இரவு பணி வழங்கப்பட்டது. இதனால் அவர் மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தனர்.