புதை குழி தோண்டி உயிரோடு சமாதியாக முடிவு செய்த பெற்றோர் : அதிர்ச்சிக் காரணம்!!

533

தமிழகத்தில் மகன் கவனிக்காததால், விரக்தியடைந்த பெற்றோர் புதைகுழி தோண்டி உயிருடன் சமாதியாக முடிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பரதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சாரங்கபாணி (83) தனலெட்சுமி(70).

இவர்களுக்கு பாலசுப்பிரமணியன் என்ற மகனும், சாந்தகுமாரி என்ற மகளும் உள்ளனர். மகளான சாந்தகுமாரி திருமணம் செய்து அவரது கணவருடன் அருகிலிருக்கும் கத்தாழை கிராமத்தில் வசித்து வருகிறார். பாலசுப்பிரமணியன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குறிஞ்சிப்பாடியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் சாரங்கபாணி தனக்குச் சொந்தமான பழையபெருமாத்தூரில் இருந்த நிலம், வீடு ஆகியவற்றை நெய்வேலி என்.எல்.சி நிறுவன சுரங்க விரிவாக்கத்துக்காக கொடுத்துள்ளார்.

ஆனால் அதற்கான இழப்பீடு மாற்று மனை ஆகியவற்றை என்.எல்.சி நிர்வாகம் சரிவர வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து மகனான பாலசுப்ரமணியன் ரதம்பட்டு கிராமத்தில் இருந்த நிலத்தை கடந்த மூன்று மாதங்களுக்கு முன் விற்றுள்ளார்.

நிலத்தை பாலசுப்ரமணியன் விற்ற பின்பு தந்தை சாராமணி, தாய் தனலட்சுமியை சரிவர கவனிக்கவில்லை என்றும் அவர்கள் செலவுக்குப் பணம், உணவு என எதுவும் கொடுக்காததால், வயதான காலத்தில் அவர்கள் பசியும் பட்டினியுமாக அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இப்படி அவதிப்பட்டு வாழ்வதை விட உயிரை மாய்த்துக் கொள்வதே மேல் என்று இந்த தம்பதி முடிவு செய்துள்ளனர்.
இதனால் இவர்கள் நேற்று சாரங்கபாணி தன் வீட்டுக்கு முன்புறம் உயிருடன் சமாதி ஆக குழி தோண்டியுள்ளார்.

இதுகுறித்து சாரங்கபாணி உறவினர்களுக்கு போன் செய்து மகன் கவனிக்காததால் பசி, பட்டினியுடன் வாழ முடியவில்லை. இதனால் வீட்டுக்கு முன்புறம் புதை குழி தோண்டி அதில் இறங்கி, எங்கள் மீது நாங்களே மண்ணை போட்டு உயிருடன் சமாதி ஆக முடிவு செய்துள்ளோம் எனக் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

பெற்ற மகன் கவனிக்காததால் வயதான தம்பதி உயிருடன் சமாதி ஆக புதை குழி தோண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.