இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 145ஆக உயர்வு!!

675

இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 145 பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு இந்தோனேசியாவின் லாம்போக் தீவில், கடலுக்கு அடியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவில் 6.8 மற்றும் 7 ஆக பதிவாகின.

இந்த பயங்கர நிலநடுக்கத்தால், அந்த தீவில் உள்ள 80 சதவித வீடுகள் சேதமடைந்தன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.

மேலும், அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுக் கொண்டு இருப்பதால் பொதுமக்கள் சாலை, தெருக்களிலேயே முகாமிட்டு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 145 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் படுகாயமும் அடைந்துள்ளனர். தற்போது அந்த தீவு முழுவது மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாலங்கள் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொலை தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

சுமார் 20 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.