தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டைப் போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த 12 வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.
கொழும்பு மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 10.08.2018 மற்றும் 11 ஆம் திகதிகளில் தேசிய ரீதியில் நடைபெற்ற (வூசோ) குத்துச்சண்டை போட்டிகளில் வவுனியாவைச் சேர்ந்த 15 இளைஞர்க யுவதிகள் பங்குபற்றி 12 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர்.
வடமாகாண வூசோ அமைப்பினூடாக, வவுனியா கண் போய்ஸ் விழையாட்டு கழகத்தின் அனுசரணையுடன் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இக் குத்துச்சண்டை போட்டியில் பங்கு பற்றியிருந்தனர்.
அந்தவகையில் ஆறு தங்கப்பதக்கங்களையும், நான்கு வெள்ளிப் பதக்கங்களையும், இரண்டு வெண்கலப்பதக்கத்தையும் சுவீகரித்துக் கொண்டனர்.
இப்போட்டியில் நான்கு பெண் வீராங்கனைகள் கலந்துகொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களையும், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் சுவீகரித்திருந்தனர்.
வடமாகாணத்திற்கான வூசோ குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளரான எஸ். நந்தகுமார் கருத்து தெரிவிக்கையில், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கும் நிலையில் பெண்கள் தற்காப்பு கலைகளை பயின்று தங்களை பாதுகாக்க முன்வரவேண்டும் என குறிப்பிட்டார்.