மேற்கிந்திய அணியை வீழ்த்திய இந்தியா: கோஹ்லி விளாசல்..!

343

indமேற்கிந்திய அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதன் முதல் போட்டி கொச்சியில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் இன்று நடந்தது. இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணித்தலைவர் பிராவோ முதலில் துடுப்பெடுத்து ஆடினார்.

மேற்கிந்திய அணியின் தொடக்க வீரர் கெய்ல் (0) ஓட்டத்தில் ஆட்டம் இழந்தார். சார்லஸ் (42) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

இதன் பின் பந்துவீச வந்த ரெய்னா அசத்தினார். இவரின் சுழலில், சாமுவேல்ஸ் (24), சிம்மன்ஸ் (29), தியோநரைன் (4) சிக்கினர். அரை சதம் கடந்த டேரன் பிராவோ 59 ஓட்டங்களுக்கு போல்டானார்.

டுவைன் பிராவோ 24 ஓட்டங்களில் ஜடேஜா சுழலில் வெளியேறினார். சமி 5 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். நரைன் (0), ராம்பால் (1) சொற்ப ஓட்டத்தில் ஆட்டம் இழந்தார்.

மேற்கிந்திய அணி 48.5 ஓவரில், 211 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. ஹோல்டர் (16)ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்திய அணி சார்பில் ஜடேஜா, ரெய்னா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இந்திய அணியின் தவான் 5 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி தந்தார். ரோகித், கோஹ்லி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சமி ஓவரில் ரோகித் இரண்டு பவுண்டரி விளாசினார். தன் பங்கிற்கு ஹோல்டர், ராம்பால் பந்துவீச்சில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். தியோநரைன் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த ரோகித், ஒரு நாள் அரங்கில் 20வது அரை சதத்தை எட்டினார்.

நரைன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோஹ்லி 27வது அரை சதத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து விளாசிய இவர் டுவைன் பிராவோ பந்தில் 2 பவுண்டரி அடித்தார்.

மேலும் ரோகித் 72 ஓட்டங்களிலும், கோஹ்லி 86 ஓட்டத்திலும் ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் ஒரு நாள் அரங்கில் 5000 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.

இந்திய அணி 35.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 212 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மேலும் இந்திய அணியில் யுவராஜ் (16), தோனி (13) ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.