முச்சக்கர வண்டிகளில் செல்லும் பயணிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!!

577

இலங்கையின் பல்வேறு பகுதியில் மோசடியான முறையில் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்றை இனங்கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பல், முச்சரவண்டிகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்து புதிய முறையில் கொள்ளையடித்து வருகின்றன.

முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பயணிகளை அல்லது முச்சக்கர வண்டி சாரதிகளை வேறு பகுதிகளுக்கு இந்தக் கும்பல் அழைத்து செல்கிறது. இதன்போது மயக்கம் ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் கலக்கப்பட்ட பால் பக்கட், இளநீர் போன்றவற்றை வழங்கி, தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை கும்பலினால் வழங்கப்பட்ட போதைப்பொருள் கலக்கப்பட்ட பால் காரணமாக பயணிகள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் மயக்கமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கும்பல் பல முச்சக்கர வண்டி சாரதிகளின் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேபோன்று இராணுவ அதிகாரி ஒருவரும் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தினால் பிலியந்தலை, நுகேகொட, புறக்கோட்டை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, தெரியாத நபர்கள் வழங்கும் எந்தவொரு உணவுப் பொருட்களையும் உண்ண வேண்டாம் என பொலிஸார் பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளனர்.