வவுனியாவில் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்களுக்கு விடுமுறை வழங்க கோரிக்கை!!

466

வவுனியாவிலுள்ள தனியார் வகுப்பு நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ். சுஜன் தெரிவித்துள்ளார்.

நேற்று வவுனியா வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர் நிலையங்களில் பணியாற்றும் இவ்வருடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும்போது,

வவுனியாவிலுள்ள தனியார் வகுப்புக்களை ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்குமாறு நிகழ்வில் கலந்துகொண்டுள்ள மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர், வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளர், நகரசபை தவிசாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

ஞாயிறு தினங்களில் நாங்கள் வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை வழங்கவேண்டும் என்று தெரிவித்து வர்த்தக நிலையங்களை மூடினால் கூட வர்த்தகப்பிரமுகர்கள், ஊழியர்கள் தமது பிள்ளைகளுடன் இருந்து நேரத்தைச் செலவிடுவதற்கு பிள்ளைகள் வீடுகளில் நிற்பதில்லை. அத்துடன் பிள்ளைகளை தனியார் வகுப்புக்களுக்கு அழைத்துச் செல்கின்ற ஒரு நிலையும் காணப்படுகின்றது.

இது குறித்து நகரசபைத் தவிசாளரிடம் முன்னரும் கோரிக்கை விடுத்திருந்தேன். அதற்குச் சாதகமான பதில்கள் தருவதாக கூறியிருந்தார்.

இச்சந்தர்ப்பத்தில் வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளர், மேலதி மாவட்ட அரசாங்க அதிபரிடமும் வர்த்தகர் சங்கம் சார்பாக இந்த வேண்டுகோளினை நாங்கள் எழுத்து மூலமாக அறியத்தருகின்றோம். இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்தால் பெற்றோர்களுக்கு அன்றைய விடுமுறை நாளாக அது அமையும்.

அரசாங்கப்பணியாளர்கள் என்றாலும் ஞாயிறு தினங்களில் அவர்கள் வீடுகளிலிருக்க முடிவதில்லை. தமது பிள்ளைகளை ஏற்றிஇறக்கவேண்யடி நிலை எற்படுகின்றதுடன் பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிடமுடியில்லை.

வர்த்தக சங்கம் சார்பாக விடுக்கப்படும் இக்கோரிக்கையினை ஏற்று நல்லதொரு முடிவினைப் பெற்றுத்தருமாறு கோருகின்றோம் என்று மேலும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.