வவுனியாவில் பாடசாலை மாணவனை பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் மேற்கொண்ட அதிபர் கைது!!

441

வவுனியாவில் பாடசாலை மாணவனை பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் மேற்கொண்ட பாடசாலை அதிபரை நேற்று (30.10.2018) மாலை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வெங்கல செட்டிக்குளம் கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபர் நேற்று மாலை வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகே வவுனியா நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் தரம் 9இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவனை பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த பாடசாலை அதிபரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

அதிபரின் பாலியல் ரீதியான தாக்கத்திற்கு உள்ளாகிய பாடசாலை மாணவன் மருத்துவ பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அதிபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலை அதிபர் ஏற்கனவே முன்பு கடமையாற்றிய பாடசாலையில் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் இடமாற்றம் பெற்று இப் பாடசாலைக்கு நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.