வவுனியாவில் 10 இலட்சம் ரூபா பணம் கொள்ளை!!

607

வவுனியாவில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து நேற்று (01.11.2018) மாலை 6.30 மணியளவில் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரூபா 10 இலட்சம் பணம் இனந்தெரியாத இரு நபர்களினால் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து நேற்று மாலை 6.30 மணியளவில் வங்கி ஒன்றில் இயந்திரமூடாக பணத்தைப் பரிமாற்றம் செய்வதற்கு 10 இலட்சம் ரூபா எரிபொருள் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

வவுனியா இ.போ.ச சாலை அருகில் வெள்ளை நிற அப்பாச்சி ரக மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த நபரை வழிமறித்து பணத்தை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து பணத்தைப் பறிகொடுத்த ஊழியர் குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு திரும்பிச் சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளதுடன் உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் மேற்கொண்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலதிக விசாரணைகளைப் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.