வவுனியா, அட்டமஸ்கட பிரதேசத்தில் அமைந்திருந்த சிறுவர் இல்லத்தில் சிறுவர்களுக்கு பல்வேறு துஸ்பிரயோகங்கள் இடம்பெற்ற நிலையில் அதன் காப்பாளர் கல்யாணதிஸ்ஸ தேரர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வவுனியா சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் நிலையத்தில் நேற்று மேலும் ஐந்து சிறுவர்கள், முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக நிலையத்தின் பெறுப்பதிகாரி தி.மனோகரராசா தெரிவித்தார்.
வவுனியா அட்டமஸ்கட பகுதியில் 2010ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த சிறுவர் இல்லத்தில், விகாராதிபதியினால் சிறுவர் துஸ்பிரயோகம் மேற்காள்ளப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் வவுனியா மாவட்ட நீதிமன்றில் கடந்த 6.11.2013 அன்று தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் பின்னதாக விகாரதிபதிக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் முதலாம் திகதி மீண்டும் அவ் வழங்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையன்று டிசம்பர் 3ம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் விகாராதிபதி விளக்கமறியல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 26ம் திகதி மேலும் ஒரு சிறுவன் தன்னை சிறுவர் இல்லத்தில் இருந்த சிலர் தடிகளால் தாக்கியதாகவும் இதன் காரணமாக பலகையில் இருந்த ஆணி தனக்கு காயத்தை ஏற்படுத்தியமையால் தனக்கு தோல் நோய் ஏற்பட்டுள்ளதாக வவுனியா சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் வவுனியா பொலிஸிலும் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.
அதனையடுத்து மேலும் 5 சிறுவர்கள் நேற்று தமது பெற்றோருடன் வவுனியா சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் நிலையத்திற்கு சென்று தமது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர் என அவர் மேலும் தெரிவத்தார்.




