வவுனியா திருநாவற்குளம் மற்றும் தாண்டிக்குளம் ஆகிய பாடசாலைகளில் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின்போது 100ற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும், ஏனைய மாணவர்களுக்கும் உதவி வழங்கும் நிகழ்வொன்று திருநாவற்குளத்தில் இடம்பெற்றது.
இதன்படி ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 100ற்கு மேல் புள்ளிகளைப் பெற்ற திருநாவற்குளம், தாண்டிக்குளம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 20 மாணவர்களுக்கு தலா 2500 ரூபாய் வீதம் அவர்களின் பெயர்களில் வங்கிக் கணக்கில் இடப்பட்டு, அதற்கான சேமிப்புப் புத்தங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதேபோல் ஏனைய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு.தர்மலிங்கம் நாகராஜா அவர்களால் இதற்கான பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
திரு. ராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உப தலைவருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர் சு.ஜெகதீஸ்வரன்(சிவம்), திரு.கண்ணன் ஆகியோரும், ஆசிரியர்களும் இந்த மாணவர்களுக்கான சேமிப்புப் புத்தகங்களையும், பாதணிகளையும் வழங்கி வைத்தார்கள்.





