மனைவி அழகாக இருந்ததால் கல்லைப்போட்டு கொலைசெய்த கணவன் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

409

 

அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் மனைவி அழகாக இருந்தது பிடிக்காததால் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு, கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு, திரு.வி.க.நகரில் வசித்து வந்தவர் துக்காராம்(42). இவரது மனைவி தாராபாய்(33). இவர்களுக்கு சஞ்சய்ராம், அனுமந்ராம், ஸ்ரீராம் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

மனைவி அழகாக இருப்பது பிடிக்காத துக்காராம் அவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை எழுந்த மகன் சஞ்சய்ராம் தனது தந்தை தூக்கில் தூங்கி இறந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனை அம்மாவிடம் கூற சென்றபோது அவரும் தலை நசுங்கியபடி இறந்துகிடந்துள்ளார். இதனால் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த அக்கம் பக்கத்தினர், கணவன்-மனைவி இருவரும் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் துக்காராம், தாராபாயின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தாராபாய் அழகாக இருப்பதால் அவர் மீது அடிக்கடி சந்தேகப்பட்டு துக்காராம் தகராறு செய்துள்ளார். நீண்ட காலமாகவே இந்த பிரச்சனை நீடித்துள்ளது.

இவ்வாறு சண்டையிடும்போது, என்றாவது ஒருநாள் உன்னை கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்துகொள்வேன் என்று துக்காராம் தனது மனைவியிடம் கூறியிருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

அதன்படியே, நள்ளிரவில் கிரைண்டர் கல்லை எடுத்து தாராபாய் தலையில் போட்டு துக்காராம் கொலை செய்துள்ளார். அதன் பின்னர் மனைவியின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.