நெடுந்தீவு பிரதேசத்திலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் வெளியேறுவதை தடை செய்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.
நெடுந்தீவு துறைமுகத்தடியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தமக்கு பாதுகாவலர்களாகவும், துன்ப துயரங்களிலிருந்து தம்மை மீட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே வெளியேறாதே, நெடுந்தீவிலிருந்து ஈ.பி.டி.பியினர் வெளியேறி எமக்கு தண்டனை தாராதே போன்ற சுலோக அட்டைகளுடன் பேரணியாக ஈ.பி.டி.பியின் நெடுந்தீவு அலுவலக முன்றலினை சென்றடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் அவர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஈ.பி.டி.பியினர் நெடுந்தீவுப் பிரதேசத்திலிருந்து வெளியேறக் கூடாது என்று கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினை கையளித்தனர்.
மேற்படி மகஜரினை பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உதயன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்ததுடன் நடைபெற்ற கொலைச்சம்பவம் தொடர்பாக உண்மையான குற்றவாளி எத்தரப்பாக இருப்பினும் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது நோக்கமாகும்.
இவ்வாறான செயற்பாடு எமது கட்சியின் கொள்கையல்ல அதுவொரு தனிநபர்சார்ந்த குற்றச்செயலாகவே காணப்படுகின்றது இவ்வாறான செயல்களை நாம் இதுவரை அனுமதித்ததும் இல்லை இனிவரும் காலங்களில் அனுமதிக்கப் போவதிலும் இல்லை.
அந்தவகையில் எமது கட்சியின் உறுப்பினர்களை மீளாய்வு செய்ய வேண்டுமென்று கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முடிவு எடுத்திருக்கின்றார். இதனடிப்படையிலேயே நெடுந்தீவு அலுவலகம் தொடர்பாக ஆய்வு எடுக்கப்பட்டது.
ஆயினும் இந்த மக்களுடைய அபிவிருத்திப் பணி, அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளிலிருந்து தீவகப் பகுதி மக்களின் வாழ்வுக்காக என்றென்றும் உழைப்போம் என்று கூறினார்.




