முல்லைத்தீவில் இராணுவ அதிகாரி பலி : ஒருவர் படுகாயம்!!

217

இராணுவ அதிகாரி பலி

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (16.04.2019 ) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு 03ஆம் கட்டைப்பகுதியில் முல்லைத்தீவில் இருந்து முள்ளியவளை நோக்கி பயணித்த கன்டர் வாகனம் ஒன்று வற்றாப்பளையில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோத முற்பட்ட வேளை அதை தவிர்ப்பதற்காக வீதியினை விட்டு விலகி ஓராமாக சென்று விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது வீதியின் ஓரமாக கடமையில் நின்ற இராணுவ பொலிஸ் பிரிவை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் மீது கன்டர் வாகனம் மோதிக்கொண்டதில் இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தினை ஏற்படுத்திய முள்ளியவளை குமாரபுரம் பகுதியினை சேர்ந்த கன்டர் வாகனத்தின் சாரதியை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இந்த விபத்தின் போது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்தை சேர்ந்த 22 வயதுடைய அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பத்திரன என்ற இராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளதுடன் பொலநறுவையைச் சேர்ந்த 32 வயதுடைய திசாநாயக்க என்ற இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார்.