கோர விபத்தில் 10 பேர் பலி : 4 வயதுடைய இரட்டைப் பெண் குழந்தைகளும் உயிரிழந்த சோகம்!!

915

கோர விபத்தில் 10 பேர் பலி

பதுளை மகியங்கனை பிரதேசத்தில் இன்று (17.04.2019) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 6 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

திருகோணமலையில் இருந்து தியதலாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேரூந்துடன், பதுளையில் இருந்து மகியங்கனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் மகியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் நேருக்கு நேர் மோதி, இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10 பேரும் 3 குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பை சேர்ந்த அவர்கள், நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பிய போதே இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

சம்பவத்தில், லிஸ்டர் அலெக்சான்டர் எனப்படும் 32 வயதுடைய நபர், அவருடைய 27 வயதுடைய மனைவி மற்றும் 4 வயதுடைய இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்தவர்களுள் உள்ளடங்குகின்றனர்.

அவர்களுடன் பிரின்ஸ் ஹெடிரக் என்ற 48 வயதுடைய நபர், அவருடைய மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மற்றுமொரு மகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஜோஷப் ரெலின்டன் என்ற 56 வயதுடைய நபர், அவருடைய மனைவி, ஆகியோரும் இறந்தவர்களுள் உள்ளடங்குகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வேன் மோதுண்ட பஸ்ஸில் பயணித்த 6 பேரும் காயமடைந்து மகியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த தனியார் பஸ், பயணிகள் தேனீர் அருந்துவதற்கான நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் பயணத்தை ஆரம்பித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், பஸ் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேன் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக்கலக்கமே இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மகியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.