மற்றுமொரு சோக தகவல்

மஹியங்கனையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் அண்மையில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய நபரும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளமை நாட்டு மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரச பத்திரிகையொன்றில் இன்றைய தினம் வெளியாகியுள்ள செய்தியிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான ஜோஷப் ரெலின்டன் ஜோப்ஸ் மற்றும் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளிட்ட பத்து பேரே உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் ஜோஷப் ரெலின்டன் ஜோப்ஸ் ஓமானில் கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 13ஆம் திகதி நாடு திரும்பியவர் என தெரியவருகிறது. இவரை அழைத்து செல்வதற்காக மட்டக்களப்பிலிருந்து அவரின் உறவினர்களான, விபத்தில் இறந்தவர்கள் உட்பட அனைவரும் கொழும்பிற்கு வந்துள்ளனர்.

இவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று ஜோஷப் ரெலின்டன் ஜோப்ஸை அழைத்து கொண்டு தெஹிவளையிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.

இதன் பின்னர் கொழும்பிலிருந்து கண்டிக்கு சுற்று பயணம் மேற்கொண்டு பதுளை வீதியூடாக மட்டக்களப்பு நோக்கி செல்லும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக குறித்த பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





