3 இளம் பெண்கள்
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மிகவும் நுட்பமான கொள்ளையில் ஈடுபடும் மூன்று இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்தினபுரி நகரத்திலுள்ள பேருந்து நிலையத்தில் பணப்பை திருடும் போது இந்தப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி பேருந்து நிலையத்திலுள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் வைத்து குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்தினபுரி பொலிஸாருக்கு புத்தாண்டு தினத்தன்று கிடைத்த முறைப்பாட்டிற்கமைய செயற்பட்ட பொலிஸார் குறித்த பெண்கள் தொடர்பில் கண்காணித்துள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைக்குள் நுழைந்த 3 பெண்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய பெண் பொலிஸ் அதிகாரிகளை அழைத்து சோதனை மேற்கொண்ட போது அங்கு வெற்று பணப்பைகள் மூன்றும், 7000 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 3 பெண்களும் நீர்கொழும்பில் இருந்து முச்சக்கர வண்டியில் இரத்தினபுரிக்கு சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது. அவர்கள் 26, 23 மற்றும் 21 வயதுடைய திருமணமானவர்கள் என தெரியவந்துள்ளதுடன் இவர்களை அழைத்து வந்த முச்சக்கர வண்டி சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்படும் பணம் குறித்த முச்சக்கர வண்டி சாரதியிடமே ஒப்படைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.