முல்லைத்தீவு ஊடகவியலாளர் தவசீலன் பொலிசாரால் கைது!!

528

தவசீலன் பொலிசாரால் கைது

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படியில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பிரச்சனையினை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு அச்சுறுத்தும் நடவடிக்கையில் பொலீசார் மற்றும் படையினர்,படைபுலனாய்வாளர்கள் ஈடுபட்டுவருகின்றார்கள்.

இது தொடர்பில் ஊடக அமைப்புக்கள் பல தெரியப்படுத்தியும் எதுவித முன்னேற்றமான நடவடிக்கையும் இல்லாத நிலை தற்போதும் தொடர்ந்து வருகின்றது.

இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.19 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.

இதன்போது செல்வபுரம் பேருந்து தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் ஊடகவியலாளர்களையும் இனம் தெரியா நபர் ஒருவர் போராடட காரர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்தவேளை அவரை ஆர்ப்பாட்ட காரர்கள் அடையாளப்படுத்த முற்பட்டவேளை ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன் தலையிட்டு குறித்த நபர் யார் என்று வினவியபோது அதற்கு அவர் யார் என சொல்ல மறுத்து குறித்த இடத்தினை விட்டு தப்பிஓடிய போது ஆர்ப்பாட்ட காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்த போது தான் கடற்படை அதிகாரி என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு பொலீசாரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமான நிலையில் குறித்த நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டபாய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா எனஅடையாளப்படுத்தியபோது கடற்படையினர் அவர் தங்களுடைய நபர் என தெரிவித்த போது அவரை குறித்த இடத்தில் வருகைதந்த பொலிசாரிடம் ஒப்படைத்து திரும்பியுள்ளார்.

இன்னிலையினை தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் உண்மைக்க புறம்பான கருத்தினை தெரிவித்து முறைப்பாடு செய்யுதுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 18.04.19 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளரான ச.தவசீலனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர் இன்று காலை பொலீஸ் நிலையத்துக்கு அழைத்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைதுசெய்துள்ளனர் .

இந்நிலையில் குறித்த ஊடகவியலாளரை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த பொலீசார் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன .