தமிழகத்தில் பிறந்த குழந்தையை அமுதா என்பவர் இலங்கைக்கு விற்றுள்ள சம்பவம் விசாரணயில் தெரியவந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அமுதா. ஓய்வு பெற்ற மருத்துவ தாதியான இவர் குழந்தைகள் விற்பனை தொடா்பாக பேரம் பேசிய ஓடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஓடியோவில், ஆண் குழந்தை என்றால் 4 லட்சம் ரூபாய் என்றும், பெண் குழந்தை என்றால் ரூ. 3 லட்சம் என்றும், கருப்பு நிறத்தில் குழந்தை என்றால் ஒரு விலை, நிறமான குழந்தை என்றால் தனி விலை எனவும் அவா் பேசுகிறார்.
அதுமட்டுமின்றி, 30 ஆண்டுகளாக கடவுளின் ஆசியுடன் எந்த குறையும் இல்லாமல் இந்த தொழில் நடக்கிறது. அரசு அதிகாரிகளிடம் உங்களுக்கு அந்த குழந்தை பிறந்ததாகவே சான்றிதழ் வாக்கித் தருகிறேன்.
அதற்கு தனியாக 70 ஆயிரம் ரூபாய் தாருங்கள். 70 ஆயிரம் கொடுத்தால் போதும் அரசு அலுவலகத்தில் அந்த குழந்தை உங்களுக்கு பிறந்தது போன்ற அனைத்து சான்றிதழ்களையும் ஒரு மாதத்திற்குள் நான் பெற்றுத் தருகிறேன் என்று கூறியிருந்தார்.
அதை தொடர்ந்து அவர்களிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அதில், அவர் 3 குழந்தைகளை விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ் பெற லஞ்சம் கொடுத்தது தொடா்பாகவும் அமுதாவிடம் விசாரணை நடைபெற்றது.
சுமார் 11 மணிநேர விசாரணைக்கு பிறகு அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரனை பொலிசார் கைது செய்தனர்.
அமுதாவிடம் நடத்தப்பட்ட விசாரனையில் தமிழகம் முழுவதும் பலரும் குழந்தைகளை கடத்தி விற்பனையில் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் அரசு ஊழியர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் என பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை அவர் இலங்கைக்கு விற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதை அவர் ஈரோடு குழந்தைகள் விற்பனை கும்பல் மூலம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.