இலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல் : புலம்பெயர் தமிழ் சிறுமியின் நெகிழ்ச்சியான செயல்!!

728

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கனடா வாழ் ஈழத்து சிறுமி ஒருவர் இணையத்தில் நிதி சேகரித்து வருகின்றார்.

கடந்த 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. இதனால் குறித்த அமைப்புடன் தொடர்பை பேணியதாக கூறப்படும் தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, குண்டு வெடிப்புகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கனடா வாழ் ஈழத்து சிறுமி ஒருவர் இணையத்தில் நிதி சேகரித்து வருகின்றார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரசாந்தினி ரஜனிகாந்த் என்ற சிறுமியே நிதி சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளார். இவர் 2008ம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்து சென்றவராவார்.

இது குறித்து அந்த சிறுமி கருத்து தெரிவிக்கையில், “இலங்கை என்னுடைய தாய்நாடு என்பதால் மட்டும் நான் நிதி உதவி செய்ய நினைக்கவில்லை.

இந்த வெடிகுண்டு தாக்குதல் உலகளாவிய அளவில் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை. இத்தனை உயிர்களை இழந்த பின்னும் இந்தப் பிரச்சினை தீரவில்லை.

30 ஆண்டுகளாக நடைபெற்ற மக்கள் போராட்டமும் இனப்படுகொலையின் சோகமும் இன்னும் இருக்கிறது. ஆனாலும் யாரும் உதவவில்லை. இந்நிலையில் இப்போது நடந்த தாக்குதலை அடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன் மூலம் இலங்கையைக் காப்பாற்றுங்கள்.

இங்கு திரட்டப்படும் தொகை அனைத்தும் ஆசிரி மருத்துவமனை மற்றும் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் சிகிச்சைக்காகவும் அவர்களின் தேவைக்காகவும் பயன்படுத்தப்படும்’’ என்று நெகிழ்ச்சியுடன் பேசுகிறார்.