
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்கொலை தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பல பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.
இலங்கைக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட பல நாடுகள் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளன.
நோர்வே, சிங்கப்பூர், டென்மார்க், பின்லாந்து, மலேசியா, தாய்வான், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.
அத்துடன் தேவையான காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்குச் செல்லுமாறு அவுஸ்திரேலியா மற்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
நெதர்லாந்தும் தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாமென எச்சரித்துள்ளது. அதேவேளை இலங்கையின் தற்போதைய நிலை வழமைக்குத் திரும்பும் வரை அங்கு சுற்றுலா செல்ல வேண்டாமென பல்கேரியாவும் அறிவுறுத்திள்ளதுடன், மறு அறிவித்தல் வரை இலங்கைக்குச் செல்ல வேண்டாமென ஐக்கிய அரபு இராச்சியமும் சீனாவும் தமது நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளன.
சுவீடன், கனடா ஆகிய நாடுகளும் இலங்கைக்கு சுற்றுலா செல்ல வேண்டாமென தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளன.
இலங்கையில் கடந்த வாரம் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் காரணமாக 255 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 40 இற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




