கொழும்பில் தொழில் புரியும் பெண் கைது : பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!!

570

திருகோணமலையின் சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்கவின் வாசஸ்தலத்தில் இன்று சந்தேகநபர்களை ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

ஒலுவில் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண் கொழும்பு மருதானையில் தொழில் புரிந்து வரும் நிலையில் தம்பலகாமம் 97ஆம் கட்டை பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்கு பெற்று வசித்து வருகின்றார்.

இந்த நிலையில் அவர் திருகோணமலை நகருக்கு செல்லும் போது அவரை கப்பல் துறை பகுதியில் வைத்து பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது அந்த பெண் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய பட்சத்தில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு அசாதாரண சூழ்நிலை நிலவி கொண்டிருக்கும் காலகட்டத்தில் வீட்டை வாடகைக்கு வழங்கிய பெண்ணையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை சீனக்குடா பொலிஸ் பிரிவில் கடந்த 21ஆம் திகதி தொடக்கம் இன்று வரை 46இற்கும் மேற்பட்டவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை, நாச்சிக்குடா, வெள்ளைமணல் போன்ற பகுதிகளில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.