பங்களாதேஷில் எட்டு மாணவர்களுக்கு மரண தண்டனையும் 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
பங்ளாதேஷில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் 9ம் திகதி ஆளும்கட்சியான அவாமி லீகை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அந்த சமயத்தில் பழைய டாக்கா நகரத்தில் பிஸ்வஜித் (24) என்ற தையற்கலைஞர் தனது கடையைத் திறப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார்.
இவரைப் போராட்டவாதி என்று தவறாக நினைத்த மாணவர் குழு ஒன்று அவரை வழிமறித்து அடித்து கூரிய ஆயுதங்களால் குத்திக் கொன்றுள்ளது.
இந்த மாணவர்கள் அனைவரும் ஜெகநாத் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும், அவாமி லீகின் மாணவர் பிரிவான சத்ரா லீக் அணியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலை மிகவும் கொடூரமானது என்றும் மிகவும் வருந்தத்தக்கது என்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தின் மூலம் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட எட்டு மாணவர்களுக்கு மரண தண்டனையும், 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து அதிகபட்ச தண்டனைகள் வழங்கியதன்மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று நீதிபதி எபிஎம் நிசாமுல் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எட்டு பேரில் இருவரும், ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 13 பேரில் இருவரும் இன்னும் தலைமறைவாக இருக்கின்றனர்.
இவர்களில் பெரும்பான்மையானோர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




