ஆசிரியர் செய்த நெகிழ்ச்சி செயல்

களுத்துறையில் ஸ்ரீ தேவானந்தா மகாவித்தியாலாயத்தில் ஆசிரியர் ஒருவர் கரடி பொம்மை வேடமணிந்து மாணவர்களின் புத்தக பைகளை சோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

அதற்கமைவாக பாடசாலை மாணவர்களின் பாடசாலை பைகள் தினமும் பாடசாலை நுழைவாயிலில் வைத்து இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் ஆசிரியர்களால் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. இவ்வாறு சோதனை செய்த பின்னரே பாடசாலைக்குள் மாணவர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது மாணவர்களின் உணவு பொதிகளை சோதனையிடும் முறை, சோதனையிடுவோரின் சில விரும்பத்தகாத செயல்கள் என மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்திகள் காணப்பட்டு வந்தன.

இந்நிலையில், களுத்துறையில் ஸ்ரீ தேவானந்தா மகாவித்தியாலய ஆசிரியர் ஒருவர் கரடி பொம்மை வேடமணிந்து மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இந்த செயல் மாணவர்கள் மத்தியில் இருந்த பயத்தினை போக்கி அவர்களை மகிழ்வித்துள்ளது.

குறித்த ஆசிரியரின் செயலை பலரும் பாராட்டியுள்ளதுடன் அவரின் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிந்துள்ளனர். குறித்த படங்கள் தற்போது வைரலாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.




