இலங்கையின் பிரச்சினைக்கு வேறு நாடுகளிடம் தீர்வு தேடுவதற்குப் பதிலாக, வெளிநாடுகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கக்கூடிய விதத்திலான உள்ளூர் தீர்வுத் திட்டத்தை எட்டுவதற்காக தம்மோடு இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
2014ம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றிய போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
இலங்கையை எண்ணி இலங்கையே பெருமைப்படும் தீர்வுத் திட்டத்தை எட்ட உதவுமாறும் மகிந்த ராஜபக்ச இதன் போது கேட்டுக்கொண்டார்.
வரவுசெலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 155 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவும் 60 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.
மாகாணசபை நிர்வாகம் இல்லாதிருந்த வடக்கு மாகாணத்திலும் மாகாண சபை ஒன்றை நிறுவி, பொருளாதார அபிவிருத்தியிலும் ஜனநாயகத்திலும் எமது நாடு முக்கிய தருணத்தை எட்டியிருக்கின்ற சூழ்நிலையில் இந்த வரவு செலவுத் திட்ட விவாதம் நடக்கிறது என்றார் மகிந்த ராஜபக்ச.
தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர்களுக்கு அழைப்பு
வடக்கு மாகாண சபையில் அரச சேவைகளை பலப்படுத்தவும் மும்மொழி செயற்திட்டத்தை விரிவுபடுத்தவும் வீட்டு வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அபிவிருத்தி செய்வதற்காகவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது கூறினார்.
நான் தலைவர் ஆர்.சம்பந்தனிடமும் இந்த நாடாளுமன்றத்திடமும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண சபையிடமும் நல்லிணக்கத்துக்காகவும் சமாதானத்துக்காகவும் அபிவிருத்திக்காகவும் எமது நாட்டுக்கே உரித்தான வகையில் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக எம்மோடு இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்றார் ஜனாதிபதி.
-BBC தமிழ் –




