
நாய் கடித்த காயத்திற்கு சிகிச்சை பெறாமல் இருந்து வந்த நபர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
கலேவலை – தேவஹூவ ஹினுக்கல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான சாந்த அபேரத்ன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் தன்னை நாய் கடித்து விட்டதாக இந்த நபர் தாயிடம் கூறியுள்ளதுடன் சிகிச்சை பெறாமல் இருந்து வந்துள்ளார். இந்த நபர் தனது உடலில் காயங்கள் ஏற்பட்டால் சிகிச்சை பெறாமல் மிளகாய் தூளை வைத்து குணமாக்கிக் கொள்ளும் பழக்கமுடையவர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நாய் கடித்த பின்னரும் சிகிச்சை பெறாமல், இருந்து வந்துள்ளார். திடீரென நாயை போல் நடக்க ஆரம்பித்துள்ளார். அவரது உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டதை அடுத்து நேற்று அவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் மருத்துவர்கள் சிகிச்சையளிக்க ஆரம்பித்து சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
எந்த சந்தர்ப்பத்திலாவது நாய் கடித்தால், அடித்து செல்லும் தண்ணீரில் கடிப்பட்ட இடத்தை சவர்காரம் போட்டு நன்றாக கழுவிய பின்னர் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றால், இப்படியான மரணங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என தம்புள்ளை வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நாய் கடியால் ஏற்பட்ட காயத்திற்கு வேறு சிகிச்சை முறைகளை பின்பற்ற கூடாது என்பதுடன் எந்த தூள்களையும் அதில் போடக் கூடாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த சாந்த அபேரத்ன ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன் அவரது மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகிறார். பிள்ளை தற்போது பாட்டியிடம் வளர்ந்து வருகிறது. இந்த நபர் எப்போதும் தனிமையில் இருக்கும் நபர் எனவும் மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.




