யாழில் தனிமையில் வசித்த மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்!!

778

யாழ். புங்கன்குளம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வாள் முனையில் மூதாட்டியை அச்சுறுத்தி நகைகள், பணம் மற்றும் தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடா்பாக அயலவர்கள் கூறுகையில், மூதாட்டியின் பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்ற நிலையில் அவர் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

ஓய்வு பெற்ற அரச ஊழியரான குறித்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த கும்பலொன்று வாளை காட்டி அச்சுறுத்தி, மூதாட்டியின் வாய்க்குள் துணியை அடைத்து விட்டு பணம், நகை மற்றும் தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனர்.

கதவுகளை உடைத்தும், கூரையை பிரித்தும் இரு வழிகளால் கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

வாய்க்குள் துணி அடைக்கப்பட்ட நிலையில் மூச்சுவிட சிரமப்பட்ட மூதாட்டியை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்ததுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.

இதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இதற்கு முன்னரும் சில தடவைகள் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அயலவர்கள் கூறுகின்றனர்.