குடிக்கு அடிமையான தந்தை செய்த செயல் : விரக்தியில் இரண்டு மகள்கள் எடுத்த முடிவு!!

322

விரக்தியில் இரண்டு மகள்கள் எடுத்த முடிவு

ஒடிசாவில் பெற்ற தந்தையே தங்களை பணத்துக்கு விற்க முயன்றதால் மனமுடைந்த இரண்டு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபிசூர்யாநகரை சேர்ந்தவர் பத்பநாவ் புயன் (40). இவருக்கு தீபா (17) மற்றும் ஜீதா (11) என்ற இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

பத்பநாவின் மனைவி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதன் பின்னர் நமீதா என்ற பெண்ணை பத்பநாவ் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கூலி வேலை செய்து வந்த பத்பநாவ் குடிக்கு அடிமையானவர் ஆவார். குடித்து விட்டு மனைவி, மகள்களை அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார்.

சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் மது வாங்கவே செலவு செய்த நிலையில் பத்பநாவுக்கு அதிக பணம் தேவைப்பட்டது. இதையடுத்து கொடூரமான முடிவுக்கு அவர் வந்தார், அதன்படி தன்னுடைய இரண்டு மகள்களையும் பணத்துக்காக விற்க முடிவு செய்தார்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த தீபா மற்றும் ஜீதா எலி மருந்து குடித்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவர்களை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதையடுத்து ஊர் மக்கள் பத்பநாவை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஊர் மக்கள் கூறும் போதும் தீபாவுக்கும், ஜீதாவுக்கும் பத்பநாவ் சொந்த தந்தை என்றாலும் மாற்றாந்தந்தை போல தான் நடந்து கொண்டார் என கூறியுள்ளனர்.