
68 வயதான தாயை மகனொருவர் வீதியில் விட்டு சென்ற சம்பவம் ஒன்று காலி – ரத்கம, ரிலம்ப பிரதேசத்தில் அண்மையில் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தாய் கூறுகையில்,
எனக்கு மகனும், மகளும் இருக்கின்றனர். இதுவரை நான் மகனுடன் வசித்து வந்தேன். மகன் என்னை பேருந்தில் அழைத்து வந்து வீதியில் கைவிட்டு சென்றார். பண்டாரகமையில் உள்ள மகனின் வீட்டிலேயே நான் வசித்து வந்தேன் எனக் கூறியுள்ளார்.
இதேவேளை தாயின் கை மற்றும் கால் பகுதிகளில் சூட்டுக்காயங்கள் இருப்பதாக ரத்கம பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்மணியின் மகன் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருவதுடன் மகள் திருமணமாகி வேறு ஒரு பிரதேசத்தில் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரத்கம பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், இந்த பெண்மணிக்கு உணவு மற்றும் குடிநீரை வழங்கியுள்ளனர்.
பெண்மணி சுகவீனமாக இருப்பதால், இளைஞர்கள் அவரை ரத்கம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் பெண்மணியை வைத்தியசாலை சேர்க்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
நோயாளியை வைத்தியசாலையில் சேர்க்க அவருக்கு பாதுகாவலர் இல்லை என்பதால், பெண்மணியை வைத்தியசாலையில் சேர்க்கவில்லை என ரத்கம வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.




