இங்கிலாந்தில் 300 அடி மலைபள்ளத்தில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நாயை மீட்பு படையினர் மீட்டனர்.
இங்கிலாந்தில் உள்ள சுர்ரே மாகாணத்தில் ஹஸ்லிமியர் என்ற இடத்தை சேர்ந்த வயதான தம்பதி கிளைர் மோரிஸ் (50),மார்க் ரஸ்செல்.
இருவரும் பாசமாக கறுப்பு வெள்ளை நிறமுடைய ஒன்றரை வயதுடைய நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். வெளியே செல்லும் போது அதனையும் உடன் அழைத்து செல்வது வழக்கம்.
இங்கிலாந்தின் கிழக்கு சஸ்செக்ஸ் பகுதியில் இருக்கும் மலைப்பாங்கான இடத்திற்கு தங்களது செல்ல நாயையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றனர். அங்கு விளையாடிக் கொண்டிருந்த நாய் திடீரென மாயமானது.
இதுகுறித்து கிளைர் மோரிஸ் கூறுகையில் பூனைகளை விரட்டி சென்று விளையாடிக் கொண்டிருக்கிறது என்றுதான் முதலில் நினைத்தோம்.
ஸீகல் பறவை ஒன்றை துரத்தி சென்ற அது கடற்கரையோரம் உள்ள 300 அடி பள்ளத்தில் இருந்து கீழே விழுந்தது தெரியவந்தது. நாங்கள் அது இறந்து விட்டது என்று எண்ணி அங்கு பார்த்த போது கீழே விழுந்த நாய் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
மேலே வரதெரியாமல் தவித்ததை கண்டு பதறினோம். எங்களுக்கும் எதுவும் செய்ய இயலவில்லை. பின்னர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்து எங்களது செல்ல நாயை மீட்டு கொடுத்தனர் என்றார் நெகிழ்ச்சியுடன்.
இதுகுறித்து மீட்பு படை அதிகாரிகள் கூறுகையில்,2010ம் ஆண்டில் இருந்து இப்பகுதியில் 11 நாய்கள் உள்பட ஏராளமான விலங்குகள் விழுந்து உயிரிழந்துள்ளன. ஆனால் இது மட்டுமே தப்பி பிழைத்துள்ளது என்று தெரிவித்தனர்.




