
அமெரிக்காவை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் உயரமான மலைச்சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளான்.
ஆஜெண்டினாவின் அண்டிஸ் மலைத்தொடரில் இந்த சிகரம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 6,962 மீற்றர் உயரமுடைய இந்த மலைச்சிகரத்தை கிறிஸ்மசிற்கு முதல் நாள் தனது தந்தை கெவின் ஆர்ம்ஸ்டிராங் மற்றும் திபெத்திய ஷெர்பா லாவா டோன்டப்புடன் சென்றடைந்துள்ளான்.
இதன் மூலம் இந்த மலைச்சிகரத்தை அடைந்தவர்களிலேயே மிகவும் இளையவன் என்ற பெருமையை இந்த சிறுவன் பெற்றுள்ளான். இதற்கு முன்னர் கடந்த 2008ம் ஆண்டில் அமெரிக்க சிறுவனான மாத்யூ மோனிஸ் இந்த சாதனையைப் புரிந்திருந்தான்.
இதுகுறித்து டைலர் ஆர்ம்ஸ்டிராங் கூறுகையில், எந்த சிறுவர்களாலும் இதனை செய்ய முடியும். உங்கள் மனதையும், இலக்கையும் ஒருமுகப்படுத்திக்கொண்டால் வெற்றி பெறலாம்.
இங்கிருந்து உலகின் சூழ்நிலையை நீங்கள் காண இயலும். மேகங்கள் எல்லாம் உங்களுக்குக் கீழே செல்லும் என்றும் இது உண்மையில் மிகவும் குளிரான பகுதி எனவும் கூறியுள்ளான்.
மேலும் இதுகுறித்து கெவின் கூறுகையில், இந்த மலையேற்றத்திற்காக தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தினமும் இரண்டு முறை அவனுக்குப் பயிற்சியளித்ததாகவும், மற்றவர்கள் தாங்கள் அவனை வற்புறுத்தியதுபோல் நினைத்தாலும் உண்மையில் இது மாறான விடயமாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.




